ஆண்டாளின் ஆளுமை

 

Srimathe Ramanujaya Namaha||

Srimathe Nigamantha Maha Desikaya Namaha||

பெரிய பெருமாள் பெரிய பிராட்டி திருவடிகளே சரணம்||

ஆழ்வார் ஆசாரியன் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்||

ஆண்டாளின் ஆளுமை


அடியர்கள் அனைவருக்கும் அடியேன், D. ரங்கநாதனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 

அனைவருக்கும் ஆடி மாத வாழ்த்துக்கள்.

சென்ற வாரம் ஒரு நாள், அடியேன் ஒரு கடற்கரைக்கு சென்றிருந்தேன். அச் சமயம் தீடீரென வானம் கருத்த மேகங்களால் சுழப்பட்டது. மழை வரும் அறிகுறியாக சில தூரல்களும் விழ ஆரம்பித்தன. இந்த மாதிரியான சூழலில் பொதுவாக ஏதேனும் ஒரு கண்ண தாசன் பாடல் தான் அடியேன் மனதிற்கு தோன்றும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அச் சமயம் அடியேனுக்கு மனதில் ஆண்டாளின் ஒரு பாசுரம் நினைவுக்கு வந்தது. 

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்!

தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே!

கண்ணீர்கள் முலைக்குவட்டிற் துளி சோரச் சோர்வேனைப்!

பெண் நீர்மை ஈடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே!


இந்த பாசுரம், ஆண்டாள் திருவேங்கடவனை அடைய முடியாமல் மேகத்தை தூது விடும் பாசுரம். இந்த பாசுரம் என் நினைவுக்கு வர, வேறு ஒரு காரணமும் இருக்கலாம். அதாவது என் மனதில் நான் திருமலைக்கு சென்று வெகு நாட்கள் ஆகி விட்டதே என்ற வருத்தம் இருந்து கொண்டிருந்தது. எனவேதான் இப் பாசுரம் மனதில் தோன்றியதோ? தெரியவில்லை. 

ஆனால் இப்பாசுரம் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை நினைத்து கொண்டே வீட்டிற்கும் வந்து விட்டேன். அன்று முதல் அடியேன் மனதில் ஓடிய பல எண்ணங்களின் வடிவமைப்புதான் இந்த சிறிய உரை. 

ஒரு சிறிய வானத்தில் ஏற்பட்ட மாற்றத்தில் ஆண்டாள் நம்முள் ஒரு சிந்தனையை விளைவித்தால், நம்து அன்றாட வாழ்வில் அவள் ஆளுமை எப்படி இருக்கும் என்று யோசித்தேன். உடனே, நாம் அன்றாடம் வழக்கமாக செய்யும் செயல்களை ஆராய்ந்து பார்த்தேன். பல செய்கைகளில் ஆண்டாளின் ஆளுமை அதாவது influence தெரிந்தது. 

ஆளுமை என்றால் நாம் நம் வாழ்வியலில் அவளிடமிருந்து எதை எடுத்து கொண்டிருக்கிறோம் அல்லது எதை எடுத்து கொள்ளலாம் என்பதுதான்.

எனவே என் மனதில் ஒடிய சிந்த்னைகளை தொகுத்து “ஆண்டாளின் ஆளுமை” என்று ஒரு கட்டுரை எழுதினேன். 

அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள தற்சமயம் நடக்கும் இந்த வருட ஆடி மாதம் மிக சரியான நேரத்தை கொடுத்துள்ளது.

ஆடி மாதம் என்றாலே ஆண்டாளின் ஆடிப்பூரம் தான் நமக்கு மனதில் வரும். எனவே இக் கட்டுரையை இந்த வைபவத்தை ஒட்டி வெளியிடுகிறேன்.

இதை பற்றிய ஒரு கருத்து பறிமாற்றம்தான் அடியேனுடய இந்த சிறிய முயற்சி.

நமது வாழ்வில் நாம் அன்றாடம் செய்யும் கிரிசைகள் பல. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். அவற்றில் ஆண்டாளின் ஆளுமை எப்படி உள்ளது என்பதை ஆராய்வோம்.

இது நாள் வரை நாம் சரியாக இதை கடைப் பிடித்திருந்த்தால் இந்த உரை நமக்கு ஒரு தேர்வு.. இல்லையெனில் இது ஒரு வழி காட்டல்..

அடியேன் முதலில் நாம் அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் நடைமுறை செயல்கள் சிலவற்றை வரிசைப் படுத்துகிறேன். பின்னர் அவற்றை பற்றி ஆராய்வோம்.

நித்ய அனுஷ்டானங்கள்

வழி பாட்டு முறை - Praying to Emperuman

விண்ணப்பம் அல்லது வேண்டுதல் - Requesting Emperuman

ஞானம் பெறுதல் - Understanding Emperuman

அடையும் முறை - Attaining Emperuman

இயற்கையோடு வாழ்தல் - Live with nature

நட்பும் சுற்றமும் - Friendship & relationship

பண்பாடு அல்லது கலாசாரம் - Culture 

நெறி முறை - Protocols or Procedures 

ஒற்றுமை - Togetherness

நேசித்தல் - Love & affection 

இப்படி பல பல விதமான செயல்பாடுகள் நமது வாழ்க்கை முறையில் அமைந்துள்ளன. இவற்றில் நாம் கடைப்பிடிக்கும் வழக்கங்களில் ஆண்டாளின் ஆளுமை எவ்வாறு வெளிப்படுகிறது? ஆண்டாள் தான் இயற்றிய பாசுரங்கள் மூலமாக நமக்7கு எவ்வாறு அறிவிக்கிறாள்? என்று பார்ப்போம்.

நித்ய அனுஷ்டாங்கள்

நம் நித்ய அனுஷ்டானம் என்பது நம் ஆத்மாவை மேம்படுத்த எம்பெருமான நோக்கிச் செய்யும் செயல்கள். இந்த அனுஷ்டானங்களை நான்கு பிரிவுகளாக பார்க்கலாம்.

முதலில் “வழி பாட்டு முறை” Praying to Emperuman

நாம் எம்பெருமனை எப்படி வழி பட வேண்டும்?

பகவானிடம் நாம் விரும்பியதை பெற நோன்பு மேற் கொள்கிறோம். இதனை காட்டியதே ஆண்டாள்தான்.

“தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழது” என்று மிக எளிமையான முறையில் கூறியதும் ஆண்டாள்தான். ஒரு லகு ஆராதனையை திருப்பாவை பாசுரங்களை கொண்டு செய்து முடிக்கலாம். 

“வாயினால் பாடி மனத்தினால் சிந்த்திக்க” நமது முந்தய கர்ம வினைகளை சுட்டெரிப்பான் கண்ணன்.

எம்பெருமானை எப்படி போற்றிப் பாட வேண்டும் என்பதை 24ம் பாசுரமான “அன்று இவ் உலகம்,,” பாசுரத்தில் கூறியுள்ளாள். எம்பெருமானது வீர பராக்கிரமங்களை அவன் அவதாரங்களின் மூலம் எடுத்துரைக்கிறள்.


b. இரண்டவதாக “விண்ணப்பம்

நாம் எம்பெருமனிடம் எதை கேட்க வேண்டும்? 

எதை வேண்டும் என்றாலும் கேட்கலாம். 

ஆனால் ஓரு ஜீவன் எம்பெருமானை வேண்டுவது மறு பிறவியில் இருந்து விடுபட்டு மோக்ஷம் பெறுவது. இதை எளிதில் அடைய முடியுமா? ஒரு சாதாரண மனிதனுக்கு புரியுமா? எனவேதான் திருப்பாவையில் முதல் பாசுரத்தில் பறை என்ற இசைக் கருவியை கேட்கிறாள். 

பறைக்கும் மோக்ஷத்திற்கும் என்ன சம்மந்தம்?

பறை கிடைத்தால் கண்ணனை பாடலாம். அவனைப் பாடப்பாட பக்தி வளரும். சிந்தனை பெருகும். மோக்ஷத்தை அறிவோம். நம் கர்ம வினைகளால் இந்த பிறவியில் கொடுக்கவில்லையெனில் பின்னொரு பிறவியில் அவன் கண்டிப்பாக கொடுப்பான். இதை 29ம் பாசுரத்தில் “இற்றைப்பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா…..” என்று தெளிவு படுத்துகிறாள்.

இதைத்தான் பறை என்று வெகு சுலபமாக முதல் பாசுரத்தில் உவமை படுத்தி, அதை கேட்டு இறுதி பாசுரம் வரை நமக்கு மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறாள்.

எனவே நமக்கு எம்பெருமானை வழிபட என்ன வேண்டுமோ அதை கேட்டாலே இறுதியில் மோக்ஷம் கிடைப்பது உறுதி. 

ஏனைய ஆழ்வார்களும் இப் பிறவி வேண்டாம் என்று கேட்டாலும், ஆண்டாள் ஓருவிதத்தில் மாறு படுகிறாள். நாம் நம் கடமைகளை செய்து கொண்டே எம்பெருமானை தொழலாம் எனறு காட்டியுள்ளது இவளின் சிறப்பு.

C. அடுத்து “ஞானம் பெறுதல்” Understanding God

ஞானம் பெறுதல் என்பது நம் ஞானத்தை வளர்த்துக் கொள்வது. ஞானம் என்பது எம்பெருமானை பற்றி அறிவது. திருப்பாவையின் முதல் பாசுரத்திலேயே “நாரயணனே நமக்கே பறை தருவான்” என்று நமக்கு மறை முகமாக திரு மந்திரத்தை உபதேசித்து, “நாராயணனே” என்று கூறி அவன் மட்டுமே நமக்கு வேண்டியதை தரக் கூடியவன் என்று உறுதி பட உரைக்கிறாள். நீராட்டத்தின் மூலம் உடல் தூய்மை மிக அவசியம் என்பதையும் கூறியுள்ளாள்.

இரண்டாம் பாசுரத்தில் நாம் எம்பெருமானுக்கு விரதம் இருக்கும் பொழுது எதை செய்யலாம் எதை செய்யக் கூடாது என்பதை அறிவுறுத்துகிறாள். இந்த பாசுரத்தின் உட் கருத்து நம்து விசிஷ்டாத்வைத்யத்தையும் விளக்குகிறது. 

இதை ஒரு ஆசாரியனை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

திருப்பாவையே கீதையின் சாரம். வேத வித்து. திருப்பாவையின் ஓவ்வொரு பாசுரத்திலும் ஓரு நுணுக்கமான ஆழ்ந்த பொருளை நாம் அறியலாம். இது நமது ஞானத்தை மேம்படுத்தும். மேலும் நாச்சியார் திருமொழியிலும் கூட பல பல உட்கருத்துகளை அறியலாம்.

d. நான்கவதாக “அடையும் முறை” 

நாம் எம்பெருமனை அடைய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக கீதையில் கண்ணன் கூறியது பக்தி யோகம், கர்ம யோகம், மற்றும் ஞான யோகம். இவற்றை சரியாக செய்தால் கண்ணனை அடையலாம்.

இதனை ஒவ்வொரு பாசுரத்திலும் பல விதமாக கூறுகிறாள். கோவிலுக்கு செல்வது, கண்ணனை பாடுவது என்பதெல்லாம் பக்தி யோகம். நமது அன்றாட கர்மாக்களை செய்வது கர்ம யோகம். அவனைப் பற்றி அறிவது ஞான யோகம். 

இவற்றை நாம் அவள் பாசுரங்களில் காணலாம். இதை தவிர நான்காவதாக மிக எளிய வழியான சரணாகதியை காட்டுகிறாள். சரணாகதியே சாலச் சிறந்தது என்பதை மிக தெளிவாக உணர்துகிறாள். 

“அங்கண் மா ஞாலத்து..” என்ற பாசுரத்தில் “உலத்தில் உள்ள எல்லா அரசர்களும் வந்து உன்னடி பணிகிறார்கள். நாங்களும் அவ்வண்ணமே வந்து உன் அடி பணிகிறோம்” என்று துவங்கி 28ம் பாசுரத்தில் “நாங்கள் அறிவில்லாதவர்கள், நாங்கள் எங்கள் அறியாமயால் உன்னை சிறு பேரிட்டு அழைத்திருந்தால் மன்னித்து எங்களை ஏற்றுக் கொள்ளவும் “ என்று அவன் திருவடிகளிலேயே சரண் அடைகிறாள்.

நேரத்தை கருத்தில் கொண்டு பாசுர விரிவான விளக்கங்களை இங்கு விவரிக்க வில்லை. மன்னிக்க வேண்டும்.

இயற்கையோடு வாழ்தல் Live with nature

இயற்கை இல்லாமல் நாம் இல்லை. நமது வாழ்வில் இயற்கை மிக முக்கியமானது. பல பாசுரங்களில் நம்மை சுற்றியுள்ள பல இயற்கை நிகழ்வுகளை நம் கண் முன் நிறுத்துவாள் ஆண்டாள். அது மட்டுமன்றி அந்த நிகழ்வுகளை சாதகமாக்கிக் கொண்டு கண்ணனை அடையவும் முற்படுவாள்.

உதாரணத்திற்கு

ஓங்கி உலகளந்த..

ஆழி மழை கண்ணா..

கீழ் வானம்ளென்று

கீசு கீசு 

விண்ணீல மேலாப்பு

கடலே கடலே..

மழையே மழையே..

கார்கோடல் பூக்காள்..


இது போன்ற பல பாசுரங்களில் அந்தப் பொழுதின் சூழ்நிலைகளை நம் கண் முன் காட்சிப் படுத்தி எம்பெருமானின் பரத்துவத்தையும் மறை முகமாக நமக்கு கூறுவது அவள் திறன்.

நட்பும் சுற்றமும் Friendship & relationship

நன்பர்களும் சுற்றமும் இல்லா வாழ்க்கை ஒரு சுவாரசியமாக இருக்க முடியாது. இதை அன்றே ஆண்டாள் தன் பாசரங்கள் மூலம் காட்டியுள்ளாள். 

நாம் எங்கு சென்றாலும் ஒரு க்ரூப் பாகத்தான் செல்கிறோம் அல்லவா? இதை ஆண்டாளும் தன் பாசுரங்கள் வாயிலாக அவள் தோழிகளை பற்றி கூறுகிறாள்.

இதற்கு பல உதாரணங்கள் உண்டு. திருப்பாவை 6 ம் பாசுரத்தில் இருந்து 15ம் பாசுரம் வரை தனது தோழிகளை எழுப்பி கோவிலுக்கு செல்கிறாள். இவள் எம்பெருமானை பிரார்த்திக்க விரும்பும் பெண்களை மட்டும் அழைத்து செல்கிறாள். ஆங்கிலத்தில் இதை “like minded people” என்று கூறுகிறோம். வைணவ சம்பிரதாயத்தில் கோஷ்டி என்று அழைக்கிறோம்.

நாச்சியார் திருமொழி 11 ம் பதிகத்தில் தோழிகளிடமும் தாயரிடமும் திருவரங்கன் செய்கையை பொறுக்க முடியாமல் புலம்புகிறள். நமது ஆற்றாமை வெளிபடுத்த ஒர் நட்பு தேவை என நாம் அறியலாம்.

நாச்சியார் திருமொழி பன்னிரண்டாம் பதிகத்தில் “மற்றீகட்கு அறியலாக..” என்று துவங்கும் பதிகத்தில் தன் உறவினர்களிடம் தன்னை கிருஷ்ணனிடம் சேர்க்கும் படியாக வேண்டுகிறாள். 

 பண்பாடு அல்லது கலாச்சாரம் Culture

நமது வாழ்க்கை முறை ஓரு பண்பாட்டின் மூலம் வெளிப்படும். சுத்தமாக இருத்தல், பெரியவர்களை மதித்தல், கோவிலுக்கு செல்லுதல் போன்றவை நமது கலாசாரத்தில் ஊன்றிப் போனவை. இதை எடுத்துக் காட்டியவள் ஆண்டாள்.

திருப்பாவையில் தூய்மையோடு கோவிலுக்கு செல்ல வேண்டும், தூய மலர்களை கொண்டு பூஜிக்க வேண்டும் என ஆண்டாள் காட்டியுள்ளாள். 

நமது திருமணங்களில் எல்லா விதமான சடங்குகள் ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி வாரணமாயிரம் பாசுரங்களின் அடிப்படையில்தான் அமைந்து உள்ளது. அதாவது தோரணம் அமைத்தல், தீ வலம் வருதல், அம்மி மதித்தல்,மாலை மாற்றுதல், பொறி இடுதல் போன்றவை. ஏன் மணப்பெண்ணையே ஆண்டாக அலங்கரிக்ககிறோம் அல்லவா?

எனவே நமது சமுதாய பழக்க வழக்கங்களுக்கு வித்திட்டவள் ஆண்டாள். 

அடுத்தது “நெறி முறை “ Protocols or Procedures 

நெறி முறை என்றால் Protocol என்று அர்த்தம். உதாரணத்திற்க்கு நாம் ஒரு கலெக்டரை பார்க்க முதலில் அங்குள்ள அலுவலத்தில் ஒரு peon முதல் கொண்டு clerk, officer, PA என்று பலரிடம் permission கேட்டுத்தான் கலெக்டர் இடம் அணுக முடியும். 

கண்ணனை அணுக வேண்டும் என்றால் ஒரு சரியான முறையில் தான் அணுக முடியும் என்பதை திருப்பாவை 16ம் பாசுரத்தில் இருந்து 20 பாசுரம் வறை நமக்கு காட்டி உள்ளாள். வாயில் காப்பான் முதல் கொண்டு பிராட்டி வரை எழுப்புவது ஓரு அற்புதமான நெறி முறை. 

இவ்வாறே பகவானுக்கு அமுது படைக்கும் முறை ஒன்று உள்ளது. நாம் அவனுக்கு அமுது கொடுக்கும் பொழுது அவனிடம் என்ன அமுது எடுத்து கொண்டு வந்திருக்கிறோம் என்று கூறி அழைக்க வேணும். இதை காட்டுகிறது நாச்சியார் திருமொழி 9-6ம் பாசுரம். அதாவது “நாறு நறும் பொழில்..” பாசுரம். இதில் 100 தடா அக்கார அடிசில் என்று கூறி, “இன்று வந்து இவை கொள்ளுங்கள்” என்று திருமாலிருஞ் சோலையானை அமுது பெற அழைக்கிறாள்.

உடையவர் ஆண்டாளின் ஆசையை நிறை வேற்ற 100 தடாவில் அக்கார அடிசில் செய்து திருமாலிருஞ்சோலை மணாளனுக்கு படைத்தது அனைவரும் அறிந்த்ததே! இன்றளவும் எம்பெருமனுக்கு அமுது படைக்கும்பொழுது “நாறு நறும் பொழில்..” பாசுரம் சேவிப்பது வைணவர்களின் சிறந்த வழக்கம்..

ஆண்டளின் “சிற்றம் சிறுகாலே..”, “வங்க கடல் கடைந்த..” பாசுரங்கள், தினசரி சாற்று முறை க்ரமங்களாக சேர்த்துக் கொண்டுள்ளது பாடலின் சிறப்பை காட்டும்.

ஆறாவது விஷயம் : ஓற்றுமை - Togetherness

ஆண்டாள் தனது வேண்டுதலில் தனது தோழிகளையும் சேர்த்து கொண்டுதான் தன் விரதத்தை மேற் கொள்கிறாள். கூடியிருந்து குளிர்ந்து என்பது அவளது ஓற்றுமை குணத்தை வெளிப்படுத்தும்.

திருப்பாவை 22ம் பாசுரம் முதல் தன் தோழிகளோடுதானே கண்ணனை வேண்டுகிறாள். இதை “கூடியிருந்து குளிர்தோம்” என்கிறாள். இந்த சொற்றொடர் ஒரு வைணவ சமுதாயத்தின் அடையாள சொற்றொர் (signature phrase) ஆகவே மாறி விட்டது எனலாம்.

 இறுதியாக, நேசித்தல் - Love & affection காதல், அன்பு, பரிவு, பாசம்

கண்ணன் மேல் தனது காதலை நாச்சியார் திருமொழியில் பல பாசுரங்களில் வெளிப்படுத்தி இருக்கிறாள். முதல் பதிகத்திலேயே காம தேவன் உதவியை நாடுகிறாள். பல பாசுரங்களில் தனது பிறிவாற்றாமை (வருத்தத்தை) காட்டுவது அழகு. எம்பெருமானிடம் ஊடல் கூடல் இவளது சிறப்பு.

நம் அன்றாட வாழ்க்கையில் நம்மோடு வாழும் அனைத்து ஜீவ ராசிகளிடம் அன்பை செலுத்த வேண்டும். அதனால்தான் ஆயர் பாடியில் உள்ள பசுக்கள் மூலம் இதை நமக்கு உணர்த்துகிறாள். தனது அன்பான கிளியை தூது அனுப்புகிறாள். 

கற்றுக் கறவை, கனைத்திளம் கற்றெருமை, பட்டி மேய்ந்து ஒர் காரேறு போன்ற பல பாசுரங்கள் இவற்றுக்கு எடுத்துக் காட்டு.. 

“கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்“. இட்டமான பசுக்களை இனிது மறித்து நீருட்டி” என்று கூறுவதிலிருந்து அவள் பசுக்களை எவ்வளவு அன்பாக பரிவுடனும் பாசத்துடனும் நேசித்தாள் என்று காணலாம்.

இதைப் போன்று நாம் ஆண்டாளின் ஓவ்வொரு பாசுரங்களை ஆழமாக பார்த்தோமேயானால், ஆண்டாள் நமது ஒவ்வொரு செயலிலும் சிந்தனையிலும் நம்முள் எவ்வாறு ஓரு தாக்கத்தை ஏற்படுத்துகிறாள் என்பதை காணலாம்.

இந்த உரை ஓரு மேலோட்டமான பார்வைதான். விருப்பமுள்ளவர்கள் மேற் கொண்டு ஆராய்து அனுபவிகலாம்.

சனாதன வழியை பின்பற்றும் நமக்கு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள ஒரு நல்ல வாழ்வு முறை தேவைப் படுகிறது. இதை பெரும்பாலும் நமது பெரியோர்கள் மற்றும் சுற்றப் புற சுழலில் வாழும் மக்களைப் பார்த்து வழக்கப் படுத்தி கொள்கிறோம். இப்படி அறியும் வாழ்வு முறையில் ஆண்டாள் கூறும் வழி முறையையும் பின் பற்றினால் இந்த பிறவியில் இருந்தும் விடு படலாம். மேலும் நாம் அனைவரும் நமது செயல்களை ஓப்பிட்டுப் பார்த்து ஆண்டாள் கூறுவதை நடைமுறையில் கடைப் பிடித்தால் இந்த வாழ்வின் பொருளை அறிந்து உஜ்ஜீவனம் பெறுவது உறுதி.

வண் புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!

ஆண்டாள் திருவடிகளே சரணம்||














Comments

  1. As it is in Tamil , very simple and easy to understand.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Sri Vaishnava Philosophy - Part A

Basics of Sri Vaishnavam - #2 - Saranagathi